9.021 வேணாட்டடிகள் - கோயில் (கோயில் (சிதம்பரம்) ) |
Back to Top
வேணாட்டடிகள் திருவிசைப்பா
9.021  
வேணாட்டடிகள் - கோயில்
பண் - (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
துச்சான செய்திடினும் பொறுப்பரன்றே ஆள் உகப்பார் கைச்சாலும் சிறுகதலி இலைவேம்புங் கறிகொள்வார் எச்சார்வும் இல்லாமை நீ அறிந்தும் எனதுபணி நச்சாய்காண் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.
| [1] |
தம்பானை சாய்ப்பற்றார் என்னும் முதுசொல்லும் எம்போல்வார்க் கில்லாமை என்னளவே அறிந்தொழிந்தேன் வம்பானார் பணிஉகத்தி வழிஅடியேன் தொழில்இறையும் நம்பாய்காண் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.
| [2] |
பொசியாதோ கீழ்க்கொம்பு நிறைகுளம்என் றதுபோலத் திசைநோக்கிப் பேழ்கணித்துச் சிவபெருமான் ஓஎனினும் இசையானால் என்திறத்தும் எனையுடையாள் உரையாடாள் நசையானேன் றிருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.
| [3] |
ஆயாத சமயங்கள் அவரவர்கண் முன்பென்னை நோயோடு பிணிநலிய இருக்கின்ற அதனாலே பேயாஇத் தொழும்பனைத்தம் பிரான்இகழும் என்பித்தாய் நாயேனைத் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.
| [4] |
நின்றுநினைந் திருந்துகிடந் தெழுந்துதொழும் தொழும்பனேன் ஒன்றிஒரு கால்நினையா திருந்தாலும் இருக்கவொட்டாய் கன்றுபிரி கற்றாப்போல் கதறுவித்தி வரவுநில்லாய் நன்றிதுவோ திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.
| [5] |
படுமதமும் இடவயிறும் உடையகளி றுடையபிரான் அடிஅறிய உணர்த்துவதும் அகத்தியனுக் கோத்தன்றே இடுவதுபுல் ஓர்எருதுக் கொன்றினுக்கு வையிடுதல் நடுவிதுவோ திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.
| [6] |
மண்ணோடு விண்ணளவும் மனிதரொடு வானவர்க்கும் கண்ணாவாய் கண்ணாகா தொழிதலும்நான் மிகக்கலங்கி அண்ணாவோ என்றண்ணாந் தலமந்து விளித்தாலும் நண்ணாயால் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.
| [7] |
வாடாவாய் நாப்பிதற்றி உனைநினைந்து நெஞ்சுருகி வீடாம்செய் குற்றேவல் எற்றேமற் றிதுபொய்யிற் கூடாமே கைவந்து குறுகுமா றியானுன்னை நாடாயால் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.
| [8] |
வாளாமால் அயன்வீழ்ந்து காண்பரிய மாண்பிதனைத் தோளாரக் கையாரத் துணையாரத் தொழுதாலும் ஆளோநீ உடையதுவும் அடியேன்உன் தாள்சேரும் நாளேதோ திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.
| [9] |
பாவார்ந்த தமிழ்மாலை பத்தரடித் தொண்டன்எடுத் தோவாதே அழைக்கின்றான் என்றருளின் நன்றுமிகத் தேவே தென் திருத்தில்லைக் கூத்தாடீ நாயடியேன் சாவாயும் நினைக்காண்டல் இனியுனக்குத் தடுப்பரிதே.
| [10] |