சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian  
திருவிசைப்பா

Back to Top
வேணாட்டடிகள்   திருவிசைப்பா  
9.021   வேணாட்டடிகள் - கோயில்  
பண் -   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )

9.021 வேணாட்டடிகள் - கோயில்   (கோயில் (சிதம்பரம்) )
துச்சான செய்திடினும் பொறுப்பரன்றே
   ஆள் உகப்பார்
கைச்சாலும் சிறுகதலி இலைவேம்புங்
   கறிகொள்வார்
எச்சார்வும் இல்லாமை நீ அறிந்தும்
   எனதுபணி
நச்சாய்காண் திருத்தில்லை நடம்பயிலும்
   நம்பானே.

[1]
தம்பானை சாய்ப்பற்றார் என்னும்
   முதுசொல்லும்
எம்போல்வார்க் கில்லாமை என்னளவே
   அறிந்தொழிந்தேன்
வம்பானார் பணிஉகத்தி வழிஅடியேன்
   தொழில்இறையும்
நம்பாய்காண் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே. 

[2]
பொசியாதோ கீழ்க்கொம்பு நிறைகுளம்என்
   றதுபோலத்
திசைநோக்கிப் பேழ்கணித்துச் சிவபெருமான்
   ஓஎனினும்
இசையானால் என்திறத்தும் எனையுடையாள்
   உரையாடாள்
நசையானேன் றிருத்தில்லை நடம்பயிலும்
   நம்பானே.

[3]
ஆயாத சமயங்கள் அவரவர்கண்
   முன்பென்னை
நோயோடு பிணிநலிய இருக்கின்ற
   அதனாலே
பேயாஇத் தொழும்பனைத்தம் பிரான்இகழும்
   என்பித்தாய்
நாயேனைத் திருத்தில்லை நடம்பயிலும்
   நம்பானே.

[4]
நின்றுநினைந் திருந்துகிடந் தெழுந்துதொழும்
   தொழும்பனேன்
ஒன்றிஒரு கால்நினையா திருந்தாலும்
   இருக்கவொட்டாய்
கன்றுபிரி கற்றாப்போல் கதறுவித்தி
   வரவுநில்லாய்
நன்றிதுவோ திருத்தில்லை நடம்பயிலும்
   நம்பானே.

[5]
படுமதமும் இடவயிறும் உடையகளி
   றுடையபிரான்
அடிஅறிய உணர்த்துவதும் அகத்தியனுக்
   கோத்தன்றே
இடுவதுபுல் ஓர்எருதுக் கொன்றினுக்கு
   வையிடுதல்
நடுவிதுவோ திருத்தில்லை நடம்பயிலும்
   நம்பானே. 

[6]
மண்ணோடு விண்ணளவும் மனிதரொடு
   வானவர்க்கும்
கண்ணாவாய் கண்ணாகா தொழிதலும்நான்
   மிகக்கலங்கி
அண்ணாவோ என்றண்ணாந் தலமந்து
   விளித்தாலும்
நண்ணாயால் திருத்தில்லை நடம்பயிலும்
   நம்பானே. 

[7]
வாடாவாய் நாப்பிதற்றி உனைநினைந்து
   நெஞ்சுருகி
வீடாம்செய் குற்றேவல் எற்றேமற்
   றிதுபொய்யிற்
கூடாமே கைவந்து குறுகுமா
   றியானுன்னை
நாடாயால் திருத்தில்லை நடம்பயிலும்
   நம்பானே.

[8]
வாளாமால் அயன்வீழ்ந்து காண்பரிய
   மாண்பிதனைத்
தோளாரக் கையாரத் துணையாரத்
   தொழுதாலும்
ஆளோநீ உடையதுவும் அடியேன்உன்
   தாள்சேரும்
நாளேதோ திருத்தில்லை நடம்பயிலும்
   நம்பானே. 

[9]
பாவார்ந்த தமிழ்மாலை பத்தரடித்
   தொண்டன்எடுத்
தோவாதே அழைக்கின்றான் என்றருளின்
   நன்றுமிகத்
தேவே தென் திருத்தில்லைக் கூத்தாடீ
   நாயடியேன்
சாவாயும் நினைக்காண்டல் இனியுனக்குத்
   தடுப்பரிதே. 

[10]

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai nool